Friday, November 12, 2010

அனைத்து இன மாணவர்களின் தேர்ச்சியிலும் கவனம் தேவை.

இவ்வருட 6-ம் ஆண்டு யு.பி.ஸ்.ஆர் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற நம்முடைய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் மனமார தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் நம் மாணவர்கள் வருகிற காலங்களில் பல சாதனைகள் படைத்து பெற்றோருக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.

அதே சமயத்தில் தாய் மொழி பாடங்களில் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் தேசிய மொழி பாடங்களில் வீழ்ச்சி அடைய சாத்தியமில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இவ்வருட தேர்ச்சி முடிவு.

ஆனாலும் இந்த வருட தேர்ச்சி விகிதம் கடந்த வருடத்தை காட்டிலும் சிறிய அளவில் குறைந்தே காணப்படுவதால், தேசிய மொழி தேர்ச்சி விகிதத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய சூழ்நிலையில் அரசாங்கம் உள்ளது. இதனை கல்வி அமைச்சின் தலைமை இயக்குனர் மீண்டும் மறு பரீசீலினை செய்ய முயற்சிக்கவேண்டும்.

தேசிய மொழி கருத்துணர்வு மற்றும் கட்டுரை போன்ற பாடங்களில், தமிழ் பள்ளி மாணவர்கள் மட்டுமே இந்த தேர்ச்சி நிலையை அடைந்திருக்கிறார்களா அல்லது மற்ற தேசிய பள்ளிகளிலும் இந்த சூழ்நிலை எழுந்துள்ளதா என்ற கேள்விக்கு பதில் தேவை என்பதை கல்வி அமைச்சு உணர வேண்டும்.

ஆரம்ப கட்டத்திலிருந்து இந்த சரிவு நிலையை அரசாங்கம் உணர்ந்ததா  இல்லையா;  ஒத்திகை பரீட்சையின் பொது தமிழ் பள்ளி மாணவர்கள் இப்பாடங்களில் என்ன தேர்ச்சி விகிதத்தை பெற்றாகள் என்ற உண்மையை கல்வி அமைச்சு வெளிப்படையாக  அறிவிக்க வேண்டும்.

இச்சூழ்நிலையை கண்காணிக்க மறந்த கல்வி அமைச்சு; தமிழ் பள்ளிகள் மீது கல்வி அமைச்சின் கண்காணிப்பு குறைந்துகொண்டே வருகிறது. கடந்த ஒரு வருட காலமாக எத்தனை முறை கல்வி இலாக்காவை  சார்ந்த  இயக்குனர்கள் தமிழ் பள்ளி மாணவர்களின் தேசிய மொழி தேர்ச்சி விகிதத்தை கண்டறிய  திடீர் சோதனை மேற்கொண்டார்கள் என்பதனை அறிவிக்கவேண்டும். ஆய்வு அறிக்கை ஏதேனும் உண்டா? பெயரளவுக்கு மட்டுமே ஓரிரு முறை வருகை தந்து விட்டு மாணவர்களின் தேசிய மொழி வளத்தை காணாமல் இருந்தால் என்ன நியாயம்?

இந்த குறைகளை ஈனைத்து மாநில கல்வி இலாக்காவும் உடனடியாக சரி செய்தல் வேண்டும். ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களின் தேர்வில் அல்லும் பகலும் அயராது கவனம் செலுத்தி தனது குழைந்தகளின்  எதிர்காலத்தை பிரகாசிக்க முயற்சி செய்யும் சமயத்தில் கல்வி இலாக்கா கவனமின்றி இருப்பது சகல முயற்சிகளையும் அழித்துவிடும்.

எனவே இந்த வீழ்ச்சியை நன்கு ஆராய்ந்து அடுத்த ஆண்டு இதே போன்ற தேர்ச்சி விகிதத்தை மாணவர்கள் பெறாமல் இருக்க கல்வி அமைச்சு ஒரு சீரிய முயற்சியை கையாளவேண்டும் என்பதனை கேட்டுக்கொள்கிறேன். இன பாகுபாடின்றி அனைத்து மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தையும் கல்வி அமைச்சு முழுமையா கவனிக்க பரிந்துரைசெய்கிறேன்.

-மு.குலசேகரன்-

No comments:

Post a Comment