Showing posts with label மலேசியா இன்று. Show all posts
Showing posts with label மலேசியா இன்று. Show all posts

Monday, May 2, 2011

நஜிப் மக்கள் கூட்டணியைப் பிளவுபடுத்த சதி செய்கிறார்”, குலசேகரன்

2 May | செய்தி. 
 
ஒரே மலேசியா கொள்கையின் நாயகனான பிரதமர் நஜிப் துன் ரசாக், தனது அரசியல் பலவீனத்தை ஒத்துக்கொள்ளும் வகையில் பாஸ் கட்சிக்கு அம்னோவில் இணைய அழைப்பு விடுத்திருக்கிறார் என்பது தெளிவாகிவிட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலேசகரன் மே 1 ஆம் தேதி விடுத்துள்ள அறிக்கையில் கூறினார்.

மக்கள் கூட்டணியில் பிளவு ஏற்படுத்தும் சதி நாச வேலை தொடங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அந்தச் சதியால் அம்னோ அரசியல் அனாதையாகும் சாத்தியமும் தொலைவில் இல்லை.

மக்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மூன்று கட்சிகளுக்கிடையே ஆரோக்கியமான கூட்டணி உள்ளது. ஆனால் மக்கள் கூட்டணியில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அம்னோ திரைமறைவில் பலவித சூழ்ச்சி வலைகளை விரித்தது உண்மை. அதன் பின் பல அரசியல் சதித்திட்டங்களைத் தீட்டி மக்கள் கூட்டணியிடம் தோல்வி கண்டது. அம்னோவின் ஒவ்வொரு முயற்சிகளும் எந்த வகையிலும் அதற்குப் பயனைத் தரவில்லை.

சரவாக் மாநில பொதுத்தேர்தலில் ஜசெக அபாரமான வெற்றியைக் கண்டது. நஜிப்பின் வருகை எந்தவிதமான பாதிப்பையும் மக்கள் கூட்டணிக்கு ஏற்படுத்தவில்லை. சரவாக்கில் ஜசெகவின் வெற்றி பல இன மக்களின் ஆதரவு மூலம் கிடைக்கப் பெற்றதாகும். அந்த வெற்றி ஜசெகவின் வெற்றி மட்டுமல்லாமல் அது மக்கள் கூட்டணியின் அமோக வெற்றியாக பிரதிபளித்தது.

அதே வேளையில், தேசிய முன்னணியின் கூட்டணி கட்சிகளுக்குள்ளே புதிய கோணத்தில் உட்கட்சி பூசல் தலைதூக்கியுள்ளது. சீனர்களின் ஆதரவு சக்கரம் இன்று தேசிய முன்னணியில் இறுக்கமற்ற நிலையில் உள்ளது. மசீச தலைவர் டத்தோ சுவா சொய் லேக்கின் ஒவ்வொரு கூற்றும் தேசிய முன்னணியை பலவினப்படுதுகிறது. இன்று மசீச மலாய் சிறப்புரிமைகளை எதிர்த்து குரல் கொடுப்பதே அதற்குச் சான்று.

தேசிய முன்னணியின் இன்னொரு மூத்த பங்காளி கட்சியாக விளங்கும் மஇக இப்பொழுது அதன் தலைமைத்துவ மறுவடிவ திட்டத்தின் அகோரமான தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
தேசிய முன்னணிக்கு இனிமேலும் இந்தியர்களின் ஆதரவு கிடையாது என்பது உறுதியாக இருக்கும் வேளையில், அம்னோ இனிமேலும் மஇகவை நம்பி அரசியல் நடத்தினால் அது அவர்களுக்கு பாதிப்பை உருவாக்கும் என்பதை அது அறிந்துள்ளது.

ஆகவே, இனிமேலும் பங்காளி கட்சிகள் ஒன்றும் சாதிக்க முடியாது என்பது அம்னோவிற்கு நன்கு தெளிவாகிவிட்டது. ஆகவே, இனியும் மசீசவையோ மஇகாவையோ சார்ந்து அரசியல் நடத்துவது ஆபத்தாகும் என்பதால், இனவாத கொள்கையைக் காட்டி நஜிப் பாஸ் கட்சியை மக்கள் கூட்டணியில் இருந்து பிரிக்க சதித்திட்டம் வரைந்துள்ளார்.

ஒரே மலேசியா கொள்கையை நிறுவியவரான நஜிப், இன்று தனது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட இனவாத கொள்கையைக் கொண்டு பாஸ் கட்சியை அழைப்பது அரசியல் அறமா?
இன்று, இனம், சமுதாயம், நாடு ஆகியவற்றுக்காக போராட பாஸ் தேசிய முன்னணியில் இணைய வேண்டும் என்றும்

சொல்லும் நஜிப், தற்பொழுது உள்ள அவரின் பங்காளி கட்சிகளின் மேல் நம்பிக்கை இழந்துவிட்டார் என்பதைக் கூறாமல் கூறிவிட்டார்.

மேலும், நஜிப் சொல்வதைப் போல ஜசெக எந்த ஒரு சூழ்நிலையிலும் பாஸ் கட்சியை அரசியல் கூட்டணியின்  கருவியாக நினைத்ததே கிடையாது.
நஜிப்பின் இன்றையச் செயல் அம்னோதான் பாஸ் கட்சியை தனது அரசியல் கருவியாக பயன்படுத்த இறங்கியுள்ளது.
இது போன்ற கொள்கையற்ற இனவாத செயல் திட்டத்திற்கு தலைவணங்காத பாஸ் தலைமைத்துவத்தின் திடமான கொள்கைக்கு ஜசெக என்றைக்கும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கும் என்பது உறுதி என்றார் ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜசெகவின் உதவித் தலைவருமான எம். குலசேகரன்.